புதுச்சேரியில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் விவசாயிகளின் நிலத்தின் மண்வளம் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு மண் வள அட்டை வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி வேளாண் துறை, வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இரண்டாவது ஆண்டாக உலக மண் வள தின விழா மதகடிப்பட்டு அரசு பழப் பண்ணையில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பங்கேற்றுப் பேசியதாவது:
இயற்கை வேளாண்மைக்கு வருங்காலத்தில் புதுச்சேரி அரசு முக்கியத்துவம் அளிக்கும். விவசாயிகள் அதிக லாபம் ஈட்டவும், உணவு உற்பத்திக்கும் அரசு உதவி செய்யும்.
புதுச்சேரியில் 17 ஆயிரம் விவசாயிகளும், காரைக்காலில் 10 ஆயிரம் விவசாயிகளும் உள்ளனர்.
இவர்களில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் பேரின் நிலத்தின் மண்வளம் பரிசோதிக்கப்பட்டு மண்வள அட்டை வழங்கப்படும்.
இதன் மூலம் விவசாயிகள் தங்களது
நிலத்தில் எந்தமாதிரியான பயிரை பயிரிட முடியும் என்ற உறுதியை அரசு அளிக்கும் என்றார்.
வேளாண் செயலர் மணிகண்டன், கோபிகா எம்.எல்.ஏ., வேளாண்துறை இயக்குனர் இராமமூர்த்தி, கூடுதல் வேளாண் இயக்குநர் ரவிப்பிரகாசம், அலுவலக அதிகாரிகள், களப்பணியாளர்கள், ஆத்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.