குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதுச்சேரி இளைஞரை விக்கிரவாண்டி போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், கரிக்கலாம்பாக்கம் அரசக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் அய்யனார் (22). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அய்யனாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அய்யனாரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் சிறையில் உள்ள அய்யனாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி போலீஸார் கைது செய்து, மீண்டும் சிறையில்
அடைத்தனர்.