புதுவையில் குப்பைகளை அள்ளும் தனியார் நிறுவனத்துக்கான தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டால் உள்ளாட்சித் துறைச் செயலர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: குப்பைகளை அள்ளும் தனியார் நிறுவனத்துக்கு அதற்குண்டான தொகையை உள்ளாட்சித் துறை விடுவிக்கவில்லை. இதனால் துப்புரவு ஊழியர்களுக்கு ஊதியத்தை அந்த நிறுவனம் தரவில்லை. இதைக் கண்டித்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகள் தேக்கம் அடைந்து புதுச்சேரி நகரம் துர்நாற்றம் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் நாள்தோறும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
குப்பைகள் தேங்கினால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். இதனால் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும். தூய்மையான புதுச்சேரி என்ற பெயர் நிலைக்காமல் போய்விடும்.
வழங்க வேண்டிய தொகையை மாதந்தோறும் அளித்துவிட்டால், குப்பைகளை அள்ளும் பணி பாதிக்கப்படாது.
தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டால் உரிய காரணங்களுடன் உள்ளாட்சித் துறைச் செயலர், இயக்குநர் விளக்கமளிக்க வேண்டும். அவர்களது விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், அது அவர்களின் பணிப் பதிவேட்டில் வைக்கப்படும் என்றார்
ஆளுநர் கிரண் பேடி.