புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தர்மோர்தாஸ், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சனிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது பணிகள் சிறக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
புதுவை மாநில பாஜக சார்பில், தலைவர் வி.சாமிநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரதமரின் சகோதரருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவார் எனத் தெரிகிறது.