மூளைச் சாவு அடைந்த பெண்ணின் கைகளை 16 வயது இளைஞருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஜிப்மர் மருத்துவர்கள் பொருத்தி சாதனை படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேலகுந்தை காலனியைச் சேர்ந்தவர் ரத்தினாம்பாள் (50). இவர் கடந்த 1-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் மீட்டு விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் கடந்த 2-ஆம் தேதி ரத்தினாம்பாள் மூளைச் சாவு அடைந்தார். இதுகுறித்து அவரது மகள் சாந்தி, மருமகன் நடராஜன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரத்தினாம்பாளின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர்.
இதையடுத்து, ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 16 மணி நேர அறுவைச் சிகிச்சை செய்து, ரத்தினாம்பாளின் கைகளை 16 வயது இளைஞருக்கு பொருத்தினர்.
மேலும், ரத்தினாம்பாளின் இரண்டு சிறுநீரகங்களும், இரண்டு கண்களும் தானமாக பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் மணிகண்டன், ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையேற்றனர்.
இதுகுறித்து இயக்குநர் எஸ்சி.பரிஜா கூறுகையில், ஜிப்மரில் இருதரப்பு கைமாற்று அறுவைச் சிகிச்சை முதல் முறையாக நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் இந்த இலக்கை அடைந்த முதல் அரசு மருத்துவமனை ஜிப்மர்தான். படிப்பறிவில்லாத ஏழை குடும்பமாக இருந்தாலும் ரத்தினம்பாளின் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளது மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்றார்.