சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறந்த காவல் நிலையத்துக்கு விருது வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 -இல் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் விழாவில் சிறந்த காவல் நிலையத்துக்கு விருது வழங்கப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான சிறந்த காவல் நிலைத்தைத் தேர்வு செய்தவதற்கான குழுவை டிஜிபி சுனில்
குமார் கெüதம் அமைத்துள்ளார்.
அந்தக் குழுவின் தலைவராக காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் காரைக்கால் காவல் கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி, தலைமைச் செயலகக் காவல் கண்காணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விருதுக்கான போட்டியில் காரைக்கால் நிரவி, திருநள்ளார், கிருமாம்பாக்கம், ஒதியஞ்சாலை, முத்தியால்பேட்டை ஆகிய 5 காவல் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கான ஆய்வு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக காரைக்கால் நிரவி, திருநள்ளார் ஆகிய காவல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிருமாம்பாக்கம், ஒதியஞ்சாலை, முத்தியால்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது, காவல் நிலையங்களில் கைதிகளின் அறை, கோப்புகள் பராமரிக்கப்படுவது, தங்கும் அறை, ஆவணங்களைப் பாதுகாக்கும் அறை, ஆயுதங்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.
மேலும், காவல் நிலையத்தின் சுற்றுச்சூழல், காவலர்கள் அதனைப் பராமரிக்கும் முறை குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் அறிக்கையை டிஜிபி சுனில்குமார் கெüதமிடம் குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும். பின்னர், சுதந்திர தினத்தில் அந்தக் காவல் நிலையத்துக்கு விருது வழங்கப்படும்.