புதுவையில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் கொளுத்தியது. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாயினர். தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், புதுவையில் மழை பெய்யவில்லை. கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாலை வேளைகளில் நன்றாக மேகம் சூழ்ந்த போதிலும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதலே
இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான காற்று வீசியது. வெயிலால் வாடி வந்த பொதுமக்கள் இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.