நூலகங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல என்று மாநில நூலகத் துறை இயக்குநர் அ.கணேசன் வருத்தம் தெரிவித்தார்.
புதுச்சேரி கலை - பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சார்பில், நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனின் 126-ஆவது பிறந்த நாள் விழா ரோமண்ட் ரோலன் நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், நூலகத் இயக்குநர் கணேசன் கலந்து கொண்டு, எஸ்.ஆர்.ரங்கநாதன் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, கருத்தரங்கம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இதனைத் தொடக்கிவைத்து நூலகத் துறை இயக்குநர் கணேசன் பேசியதாவது:
நூலகங்களில் பல லட்சம் செலவில் வாங்கப்பட்ட நூல்கள் மூட்டைக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. நூலகங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தினால்தான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.
இதுபோன்ற காரணங்களால் நூலகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நூலகத்துக்குச் சென்றால் எல்லா நூல்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும்.
அனைவரும் இணைந்து பணியாற்றினால்தான் நூலகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிகழாண்டு நூல்கள் வாங்கக்கூட நிதியில்லை. இந்த நிலையிலும் ரோமண்ட் ரோலன் நூலகத்தைச் சீரமைத்து வருகிறோம் என்றார் அவர்.
இந்த விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் சாதிக் பாஷா, புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நீலாதரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவில் நூலகர்கள், நூலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.