புதுவை மாநில பாஜக இளைஞரணி சார்பில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மோட்டார் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மோட்டார் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை புதுவைக் கிழக்குக் கடற்கரைச் சாலை சித்தானந்தா கோயில் அருகே தொடங்கி, கடற்கரை காந்தி சிலையை அடைகிறது.
மாநில இளைஞரணித் தலைவர் மெளலித்தேவன் தலைமை வகிக்கிறார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேரணியைத் தொடக்கி வைக்கிறார். பேரணி நிறைவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், முன்னாள் ராணுவ வீரர்களை அவர் கெளரவிக்கிறார்.
தொடர்ந்து அவர், பிற்பகல் 3 மணி அளிவில் புதுச்சேரி துறைமுக மேம்பாட்டுப் பணி, நூறடி சாலை, அரும்பார்த்தபுரம், ரயில்வே கடவுப் பாதை, மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.