ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 13-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகிய இருவர் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், இந்தியக் கடலோரக் காவல் படையும் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளனர். மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மனித உரிமை மீறலாகும்.
இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மீனவர் பேரவை கடந்த 18-ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தது.
இந்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குப் பதிவு செய்துள்ளதை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் எனவும் இளங்கோ வலியுறுத்தினார்.