பள்ளிக் கட்டட விபத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை, தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் மோசமான நிலையில் இருக்கும் கல்வித்துறை கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 58 கட்டடங்கள் இனம் காணப்பட்டு இதுவரை 28 கட்டடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன.
ஆனால், இதுவரை எவ்வித விபத்தும் ஏற்படவில்லை.
எதிர்பாராத விதமாக தொண்டமாநத்தம் அரசுப் பள்ளியில் கட்டடத்தை இடிக்கும்போது விபத்தில் அரசு ஊழியரான சிவபாரதி, எம்.டி.எஸ். ஊழியர்அய்யப்பன் ஆகியோர் இறந்துவிட்டனர். மற்றொரு எம்.டி.எஸ். தொழிலாளி ராமனுக்கு காலில் முறிவும், மற்றொருவருக்கு சிறுகாயமும் ஏற்பட்டுள்ளது.
இறந்த சிவபாரதி, அய்யப்பன் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அதேபோல, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காலில் காயமடைந்த ராமனின் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்.
சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் விசாரணைக்கு பிறகு அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.