அரசுப் பள்ளி விபத்து: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: முதல்வர் உறுதி

அரசுப் பள்ளி கட்டட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வி.நாராயணசாமி உறுதி அளித்தார்.

அரசுப் பள்ளி கட்டட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வி.நாராயணசாமி உறுதி அளித்தார்.
 புதுச்சேரி அருகே தொண்டமாநத்தம் கிராமத்தில் பழைமையான அரசுப் பள்ளிக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை இடிக்கும் பணியின் போது, தளத்தின் மேலிருந்த குடிநீர்த் தொட்டியை அகற்ற முயன்றனர். அப்போது கட்டடம் சரிந்து இடிபாடுகளில் சிக்கிய பள்ளிக் கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர் அய்யனார் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
 விபத்து நிகழ்ந்த பள்ளிக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும், பள்ளிக் கட்டடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் விசாரணைக்கு உள்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஆ.கமலக்கண்ணன் தெரிவித்திருந்தார்.
 அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி அந்தப் பள்ளிக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
 புதுவையில் 58 பழைமையான பள்ளிக் கட்டடங்களை இடிக்க பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 28 கட்டடங்களை இடித்து விட்டோம். இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கும் போது இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 இந்த விவகாரத்தில் தவறு செய்தோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தோர் குடும்பத்தினர் வேலை கேட்டுள்ளனர். கல்வித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 உறவினர்கள் கோஷம்: இதற்கிடையே, அங்கு குழுமியிருந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் உடனடியாக நிவாரணத்தை அறிவிக்கக் கோரி கோஷமிட்டனர். இதுதொடர்பாக ஆலோசித்து அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்ததை அவர்கள் ஏற்கவில்லை. நிவாரணத்தை அறிவித்த பிறகுதான் சடலத்தைப் பெறுவோம் என்றனர்.
 இதையடுத்து முதல்வர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
 முதல்வரின் ஆய்வுக்குப் பிறகு புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் உள்ள பிள்ளையார்குப்பத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு, முதல்வர் ஆய்வுக்கு வந்த போது எங்களது குறைகளை தெரிவித்தோம். அவர் சென்ற பிறகு அங்கிருந்த ஊசுடு தொகுதி எம்எல்ஏவின் உதவியாளர் எங்களிடம் எவ்வாறு இங்கு வந்து குறை கூறலாம் என்று கேட்டார்.
 நாங்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தோம். அப்போது அவர் எங்களில் ஒருவரை தாக்கி விட்டார்.
 அதைக் கண்டித்தும், வேலை, நிவாரணத்தை அறிவிக்கக் கோரியும் ஒப்பாரி போராட்டம் நடத்தினோம் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com