புதுச்சேரி, காரைக்காலில் டிச.9-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் நீதியரசர் ஹீலுவாடி ரமேஷ் வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் டிச.9-ஆம் தேதி காலை 10 மணி அளவில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதேபோல, காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாஹே நீதிமன்ற வளாகத்திலும், ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் தேசிய
மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.
இதன் தொடக்க விழாவில் புதுவை தலைமை நீதிபதி தனபால், சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுச்சேரி நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் திருக்கண்ண செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள், வழக்குரைஞர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வழக்காளிகள் பங்கேற்க உள்ளனர்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமார் 4,602 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அதற்காக புதுவையில் 9 அமர்வுகள், காரைக்காலில் 2 அமர்வுகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு அமர்வும் செயல்பட உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.