ஏடிஎமில் திருட்டு முயற்சி: போலீஸார் தீவிர விசாரணை
புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சி தொடர்பாக இயந்திரத்தில் பதிவான விரல் ரேகைகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பாரதி வீதி சுப்பையா சாலை சந்திப்பில் நாட்டுடைமை வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, செவ்வாய்க்கிழமை பிற்பகல் பணம் நிரப்பப்பட்டதாம்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கடப்பாறையைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.
உடனே வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது பணம் எதும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது.
கணகாணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியபோது செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை.
இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு பேரின் விரல் ரேகை பதிவாகியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இருவரின் விரல் ரேகைகள் குற்றவாளிகளின் ரேகையோடு ஒத்துப் போகிறதா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.