ஒக்கி புயலால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உண்மை நிலையை அறிந்து தமிழகம், புதுச்சேரி அரசுகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மீனவர் பேரவை தெரிவித்துள்ளது.
தேசிய மீனவர் பேரவை சார்பில் அதன் தலைவர் இளங்கோ தலைமையிலான உண்மைக் கண்டறியும் குழு சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்து, உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயல் ஒட்டுமொத்த மாவட்ட மீனவர்களை நிலை குலையச் செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை கணக்கிட முடியவில்லை. பலர் பல்வேறு மாநிலங்களில், நாடுகளில், தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த விவரத்தையும் இதுவரை கணக்கிட முடியவில்லை. இந்த நிலையில், எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நேரில் சென்று கண்டறிந்து கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து, அது
குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மீனவர் பேரவை உத்தேசித்துள்ளது.
அதற்கான உண்மைக் கண்டறியும் குழுவில் தேசிய மீனவர் பேரவைத் தலைவர், மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த ஆலோசகர்கள் ஆண்டன் கோமஸ், அருளானந்தம், தேசிய மீனவர் பேரவை தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்குரைஞர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு டிசம்பர் 9 -ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 3 நாள்கள் கன்னியாகுமரி மாவட்ட கிராமங்களில் மீனவர்கள், தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரைச் சந்தித்து விவரங்களைச் சேகரிப்பார்கள்.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை ஒருவாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.