புதுச்சேரி தேவி தும்பிளி மாரியம்மன் கோயில் உண்டியலில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக உருளையான்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி காராமணிக்குப்பத்தில் தேவி தும்பிளி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தக் கோயில் உண்டியலில் பணம் எண்ணப்பட்டது. அதன் பின்னர் உண்டியல் திறக்கப்படவில்லையாம்.
இதனிடையே, புதன்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம் போல கோயிலைப் பூட்டிவிட்டு சென்ற பூசாரி ராமமூர்த்தி, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கோயிலைத் திறக்க வந்தபோது, உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலின் மொட்டை மாடி வழியாக கதவின் பூட்டை உடைத்து படிக்கட்டு வழியாக உள்ள வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து, பணத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.