ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியால் பதில் கூற முடியவில்லை என்று புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதையொட்டி, புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.
2019-ஆம் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியால் பதில் கூறமுடியவில்லை. மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும் என மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது புதுச்சேரியில் பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இப்போது மத்திய பாஜக அரசு புதுச்சேரியை புறக்கணிக்கிறது.
துணைநிலை ஆளுநருக்கு எதிராக மக்களை காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிடுவதாக பாஜக நிர்வாகி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் யாரை எதிர்த்தாலும் நேரடியாக எதிர்க்கும். யாரை ஆதரித்தாலும் நேரடியாக ஆதரிக்கும். துணைநிலை ஆளுநரின் செயல்பாடு காரணமாக மக்கள் நலத் திட்டங்கள் காலதாமதம் ஏற்படுவதால் அவருக்கு எதிராக மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இரட்டை ஆட்சி முறை இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடக்கிறது.
அதிகாரிகளிடம் நேரடியாக விசாரணை நடத்த துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியல் சட்டம், புதுச்சேரி மாநில சட்டம் ஆகியவற்றில் இதுபோன்ற அதிகாரம் ஆளுநருக்கு தரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லை.
மாநிலத்தின் நிர்வாகியாக இருக்கும் ஆளுநரே விதிகளை மதிப்பதில்லை. அதிகாரத்தை தானாக கையில் எடுத்துக்கொண்டு ஆளுநர் செயல்படுவதை ஏற்க முடியாது.
ஆளுநர் எந்தப் பகுதிக்கு ஆய்வுக்குச் சென்றாலும் தலைமைச் செயலர் மூலமாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.வுடன் ஆய்வுக்குச் செல்ல வேண்டும். ஆனால், புதுவை
அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறார்.
அவ்வாறு செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்காது. முன்கூட்டியே தகவல் தெரிவித்துச் சென்றால் போலீஸ் பாதுகாப்பை அரசு வழங்கும். ஆளுநரின் செயல்பாட்டை தட்டிக்கேட்க புதுவை அரசுக்கு உரிமை உண்டு.
புதுச்சேரியில் யாரும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரமுடியாது. சுயகெüரவம் உள்ளவர்கள் நிறைந்த மாநிலம் புதுவை. காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. புதுவை அரசை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்.
பேட்டியின்போது, பிரதேத காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆ.நமச்சிவாயம், சமூகநலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.