பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில், 27 கைதிகள் செவ்வாய்க்கிழமை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதி, தண்டனைக் கைதி என 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை, அவர்களது குறைகள் கேட்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிறைச்சாலையைச் சுற்றி செடிகள் புதராக மண்டிக்கிடப்பதால் விஷப் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைதிகள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து சிறைத் தண்டனை கைதிகள் 27 பேர் செவ்வாய்க்கிழமை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சிறைத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆயினும், கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவில்லை.
செவ்வாய்க்கிழமை கைதிகள் 2-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.