புதுவை கோயில்களில் தை 1 முதல் அன்னதானத் திட்டம்

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 10 கோயில்களில் வருகிற தை மாதம் 1 ஆம் தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 10 கோயில்களில் வருகிற தை மாதம் 1 ஆம் தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரியில் 2017 -18ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் அன்னதானத் திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இந்து அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் பல்வேறு கோயில்களின் தனி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 அப்போது அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கோயில்களில் நிதி மிகவும் குறைவு. அரசும் குறைவான நிதி வழங்குகிறது. பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை வைத்துத்தான் அன்னதானம் வழங்க முடியும். இதற்கு நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவாகிறது என்பதால், நன்கொடையை வைத்தே எல்லா நாள்களும் அன்னதானம் வழங்கவும் முடியாது. எனவே, ஆண்டு தோறும் அன்னதானம் வழங்க ஏதுவாக அரசு போதிய நிதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றனர்.
 அதன் பின்னர் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: அன்னதானம் என்பது முறையாக வழங்கப்பட வேண்டும். பெரிய கோயில்களில் வருகிற தை மாதம் 1 ஆம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட வேண்டும். மேலும், கோயில்களின் தல புராணங்கள்,
 விழாக் காலங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் எண்ம மயமாக்க (டிஜிட்டல் மயம்) நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 எனவே, அது குறித்த விவரங்களை உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், கோயில்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும். கோயில்களில் வருவாயைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், குரு சித்தனந்தா கோயில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், அம்பகரத்தூர் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் வருகிற தை 1 ஆம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பக்தர்களின் வரவேற்பைப் பொறுத்து பல்வேறு கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com