புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6 மாதங்களில் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என இயக்குநர் எஸ்.சி.பரிஜா தெரிவித்தார்.
அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பொதுமக்கள், நோயாளிகள் நலனுக்காக பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை ஜிப்மர் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்துக்கு நிதிக்குழு அனுமதி தந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் சிகே.மிஸ்ரா தலைமையிலான குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ.32.68 கோடி செலவில் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சைகளை ரோபோட் இயந்திரம் மூலம் துல்லியமாகவும், தெளிவாகவும் மருத்துவர்கள் செய்ய ஏதுவாகும்.
முதலில் இந்த அறுவைச் சிகிச்சை சிறுநீரக சிகிச்சை துறை மூலம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் மேற்கொள்ளப்படும். படிப்படியாக வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், உதவியாளர்கள் இதற்கான பயிற்சியை பெற்றுள்ளனர்.
ரூ.23 கோடியில் புற்றுநோய் மருத்துவக் கருவிகள்: புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் வகையில் ரூ.23 கோடி செலவில் காமா கேமரா, டஉப இப எனப்படும் நவீன கருவிகள் வாங்கப்படுகின்றன.
மேலும், ரூ.28 கோடி செலவில் நவீன ரத்த வங்கி அமைக்கப்பட உள்ளது. அதேபோல, ரூ.25 கோடி செலவில் நவீன உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம் போன்றவையும் கட்டப்பட உள்ளன என்றார் பரிஜா.