புதுவை அருகே தலைக் கவசத்தை சரியாக அணிந்து செல்லாத இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
விழுப்புரம் திருவாமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்ன
குமார் (27). இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இதனால், புதுச்சேரியில் உள்ள மருத்துவர்களிடமும், மருந்துக் கடைகளிலும் கம்பெனி மருந்துகளை விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சேதராப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தலைக் கவசத்தை சரியாக அணிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது.
இதற்கிடையே, பத்துக்கண்ணு அருகில் ஒரு திருப்பத்தில் தலைக்கவசம் கீழே விழுந்துள்ளது. இதையடுத்து பிரசன்னகுமார் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வெட்டப்பட்டு இருந்த பனைமரத்தின் கட்டையில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரசன்னகுமார் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே இறந்தார். இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து ஆய்வாளர் ராஜசங்கர் வல்லட் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.