புதுவையில் முழுஅடைப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சுனில்குமார் கெளதம் தெரிவித்தார்.
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி சார்பில் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துநாதன் தலைமை வகித்தார். விழிப்புணர்வுப் பேரணியை டிஜிபி சுனில்குமார் கெளதம் தொடக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் டிஜிபி கெளதம் கூறியதாவது:
அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க தலைக்கவசம் அணிவது அவசியமாகும். காவல்துறையும் இதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. எந்தச் செயலையும் ஒருவர் மீது திணிக்க முடியாது. அவர்கள் மனதில் இருந்தே உருவாக வேண்டும். அமலோற்பவம் பள்ளி மாணவ, மாணவிகள் இதுபோன்ற விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்டது போல, பல தரப்பினரும் மேற்கொண்டால் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்.
மேலும், புதுவையில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் 9 இடங்களில் மின்னணு சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எங்கு எங்கு தேவையோ அந்த இடங்களிலும் சிக்னல்கள் அமைக்கப்படும். முழுஅடைப்பு போராட்ட வன்முறைகள் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளாரா எனக் கேட்டபோது, முழுஅடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சட்டப்படி விசாரணை நடைபெறும் என்றார் கெளதம்.