பிரான்ஸ் நாட்டில் பணிபுரிபவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், பட்டுப் புடவைகள் திருடப்பட்டன.
புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் நடராஜ் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். பிரான்ஸ் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் தாய் மரகதம் வசித்து வருகிறார். நாகராஜ் கடந்த வாரம் புதுச்சேரி வந்து விட்டு பிரான்ஸ் சென்றார். பின்னர், அவரது தாய் மரகதம் பக்கத்துத் தெருவில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மரகதம், அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது வீட்டிலுள்ள அனைத்து அறைகளும் திறந்திருந்தன. மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகள், பட்டுப் புடவைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மரகதம் அளித்த புகாரில், வீட்டிலிருந்த நகைகள், ஒரு கிலோ வெள்ளி, பட்டுப் புடவைகள், பொருள்கள் திருடு போயுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
வில்லியனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில் 20 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள், 10க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை திருடு போனதாக போலீஸார் பதிவு செய்துள்ளனர்.