புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களைப் பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடங்களைப் பெற சட்டம் இயற்றாமல், மாணவர் நலனில் அக்கறையின்றி தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக மாநில அரசு செயல்படுகிறது.
நாளை சட்டப்பேரவை முற்றுகை: காங்கிரஸ்-திமுக அரசைக் கண்டித்தும், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் இடங்களைப் பெற உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும், புதுச்சேரி அதிமுக சார்பில் வரும் 26-ஆம் தேதி (புதன்கிழமை) சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். இதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் அதிமுக அளிக்கும். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலகத்துக்கு கிரண் பேடி அறிவுறுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.