புதுச்சேரி மாநில இறகுப் பந்து சங்கத்தின் தலைவராக ஜெ.அரவிந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இறகுப் பந்து சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் புதுவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்திய இறகுப் பந்து கழகத்தின் சார்பில், மேற்பார்வையாளராக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கே. பிரபாகர் ராவ் பங்கேற்றார். ஓய்வு பெற்ற அரசு இளநிலை கணக்கு அதிகாரி இந்துமதி தேர்தலை நடத்தினர்.
சங்கத்தின் தலைவராக ஜெ.அரவிந்தன், துணைத் தலைவர்களாக டி.ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., வி.வைத்தியநாதன், எம்.கலியமூர்த்தி, காசாளராக ஜி.மாணிக்கராஜ், இணை செயலராக கே.கிரி, சங்கத்தின் மூத்த துணைத் தலைவராக ஏ.தேவதாஸ் ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி இந்துமதி வழங்கினார்.
புதுவை மாநிலத்தை சேர்ந்த கவிப்பிரியா 17 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய தரவரிசைக்கான போட்டியில் இரண்டாவது இடத்தையும், சஞ்சய் ஸ்ரீவட்சா, 19 வயதுக்கு உள்பட்ட இரட்டையர் ஆண்கள் பிரிவில் முதலிடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநில அளவில் இறகுப் பந்து போட்டிகளை ஜூலை முதல் வாரத்தில் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.