புதுச்சேரியில் இறைச்சிக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலர் இரா.அந்தோணி வெளியிட்ட அறிக்கை:
அண்மையில் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதுவை நகரம் முதல் கிராமப்புறப் பகுதிகள் வரை
1,000-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் சாலையோரங்களில் இயங்குவதால், கழிவுகளை ஆங்காங்கேயே கொட்டி விடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
எனவே அந்தந்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து எல்லைகளில் இறைச்சிக் கடைகளுக்கு இடங்களைத் தேர்வு செய்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேகுவேராவின் பிறந்த நாளை அனைத்துத் தொகுதி குழுக்கள் சார்பிலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். மரக் கன்றுகள் நட வேண்டும்.
ஜூலை 15-ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை நாடு தழுவிய பிரசார இயக்கம் நடைபெறுகிறது.
புதுவையிலும் பிரசார இயக்கத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.