கோர்க்காடு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
அந்தக் கட்சியின் உள்ளூர் கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலர் எஸ்.புருஷோத்தமன், மாநிலக் குழு உறுப்பினர் பி.முருகன், உள்ளூர் நிர்வாகிகள் மல்லிகா, மீனாட்சி, வசந்தி, ஜோதி, அருணகிரி, பாரிசாதவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கோர்க்காடு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க வேண்டும். எரியாத தெரு விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும், முறையான குடிநீர் வசதிகளைச் செய்து தர வேண்டும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டும், நியாய விலைக் கடைகளில் பொருள்களை முறையாக வழங்க வேண்டும், 100 நாள்கள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற ஜூன் 29-ஆம் தேதி நடைபெற உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொள்வது, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 23-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.