காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு நடத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
எனக்குத் தெரியாமல் ஆளுநர் காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு நடத்துகிறார். கோப்புகளைத் தேவையின்றி நிறுத்திவைக்கிறார் என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கிரண் பேடி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு நடத்த யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. இதர பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள், பொதுமக்களிடம் குறைகளை அறியவும், ஆலோசிக்கவும் எந்தத் தொழில்நுட்பம் சிறந்ததோ அதைத்தான் நான் பயன்படுத்துகிறேன்.
கோப்புகளைத் தாமதப்படுத்துவதில்லை. நானும், எனது செயலர்களும் அனுப்பப்படும் கோப்புகளை முறையாக பரிசீலிக்கிறோம்.
ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் தொடர்புடைய துறைச் செயலரை அழைத்துப் பேசி உடனே தாமதமின்றி கோப்புகளை அனுப்புகிறோம்.
அதிகாரிகளை ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்ப முதல்வரின் செயலகம் அனுமதி தருவதில் ஏற்படுத்தும் தாமதமே இதற்குக் காரணமாகும். நான் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், எனது செயலர் விரைவாகச் செயல்பட்டு கோப்புகளை அனுப்புகின்றனர்.
பல கோப்புகளில் நான் எனது கருத்துகளைப் பதிவு செய்து அனுப்பியும் அவை தலைமைச் செயலகத்திலேயே கிடப்பில் உள்ளன. பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை. சில பதில்கள் தகுதியானவையாக இல்லை. இந்தச் செயல்பாடுகள்தான் நிர்வாகத்தின் செயல்பாட்டைக் குலைக்கின்றன.
எனவே, புதுச்சேரியை முன்னேற்ற இணைந்து செயல்படுவதில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என தனது பதிவில் கூறியுள்ளார் கிரண் பேடி.