மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என, பாசிக் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாசிக் ஊழியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் பேரவைக் கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் தலைவர் அப்துல்லா கான் தலைமை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஏஐடியூசி மாநிலத் தலைவர் அபிஷேகம், செயலர் தினஷ்பொன்னையா, செயலர் சேதுசெல்வம் ஆகியோர் பேசினர்.
பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும், 15 ஆண்டுகளாக தினக்கூலி ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பாசிக் நிறுவனம் மூலம் பணியாற்றம் உழவரக மேலாளர்கள், உதவியாளர்களின் சம்பளத்தை புதுவை வேளாண் துறையே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க நிர்வாகிகள் தரணிராஜன், ரமேஷ், மூர்த்தி, கோவிந்தராஜ், குணசீலன்,, ராமமூர்த்தி, குமரன், புண்ணியக்கோடி, கோண்டபாணி, சங்கர், சண்முகம், முகமது நபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.