புதுவையில் இருந்து 2 சிறுமிகளை ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற பெண்ணை சென்னையில் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
புதுவை முதலியார்பேட்டையில் வசித்து வருபவர் தீபக். கூர்க்காவான இவரது மனைவி சுனதாதேவி (29). இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருமாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு, சுனதாதேவி ரெயின்போ நகரில் உள்ள உறவினர் ஜெயக்குமார் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்றார்.
அங்கு சென்ற அவர் ஜெயக்குமாரின் மகள் ஆர்த்தி (வயது 16), அவரது உறவினர் கெஜெந்தரின் மகள் கரிஷ்மா (14) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
நீண்ட நேரமாகியும் சுனதாதேவி, மகள்களை வீட்டுக்கு அழைத்து வராததால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார், அவரது செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டார். அப்போது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில், சுனதாதேவி சிறுமிகள் இருவரையும் புதுவையில் இருந்து பேருந்து மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. மேலும், அங்கிருந்து ஆந்திரம் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று சுனதாதேவியை மடக்கிப் பிடித்துக் கைது செய்து இரு சிறுமிகளையும் மீட்டனர்.
இதுகுறித்து சுனதாதேவியிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.