ஜிப்மரில் புதன்கிழமை நடைபெறும் சர்வதேச யோகா தினக் கருத்தரங்கில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் பரிஜா வெளியிட்ட அறிக்கை:
மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் புதுதில்லி மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்பார்வையில் சர்வதேச யோகா தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், மேம்படுத்தப்பட்ட யோகா பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தை, சர்வதேச யோகா தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவதற்கான முதன்மை மையமாக தேர்ந்தெடுத்துள்ளது. இதற்காக மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ரூ.ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜிப்மரில் கடந்த மே 21-ஆம் தேதியில் இருந்து ஒருமாத காலத்துக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடைசி நாளான புதன்கிழமை (மே 20) முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மேலும், ஜிப்மரில் யோகாவை பற்றிய ஒரு தேசிய கருத்தரங்கமும், தொடர் மருத்துவக் கல்வியும் புதன்கிழமை நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து யோகாவில் ஆர்வமுள்ள பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த கருத்தரங்கை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அக்பர் தொடக்கிவைக்கிறார்.