கோடை விடுமுறை முடிந்த நிலையில், புதுவை வடுவக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் பிரவேச உற்சவ் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் துணை ஆய்வாளர் எம்.ஜி.ராபர்ட் கென்னடி தலைமை வகித்தார். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலிருந்து பெற்றோர்கள் பள்ளிக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், இனிப்புகள் போன்றவற்றை தட்டுகளில் வைத்து சீர்வரிசையாக எடுத்து வந்தனர்.
பள்ளி வாயிலில் குழந்தைகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
புதுமனை புகுவிழா போன்று பெரிய பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
பெற்றோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியை மஞ்சுளா வரவேற்றார். தலைமையாசிரியை சாந்தகுமாரி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், பிரியா, வனிதா, பணியாளர்கள் இளஞ்செழியன், சரசுவதி ஆகியோர் செய்திருந்தனர்.