மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகளில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தும் புதுச்சேரியில் உளள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத நிலை உருவாகி உள்ளது.
சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு விவகாரத்தில் புதுச்சேரி மாணவர்கள் பாதிப்படைந்தனர். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்கள் சேரமுடியாத நிலை இருந்தது. மாணவர்கள் செய்த புகாரையடுத்து ஆளுநர் கிரண் பேடி மேற்கொண்ட முயற்சியால் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் தாற்காலிக கல்விக் கட்டணம் செலுத்தி மாணவர்கள் சேரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் 19-ஆம் தேதி மாலைக்குள் தாற்காலிக கட்டணத்தை செலுத்த வேண்டும். 20-ஆம் தேதி அவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. இதன்படி, 52 மாணவ, மாணவிகள் சென்டாக் அலுவலகத்தில் கடந்த 2 நாள்களாக கல்விக் கட்டணத்துக்கான வரைவோலையை சமர்ப்பித்தனர். திங்கள்கிழமை மாலைக்குள் மாணவர்களை சேர்க்க உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத நிலை உள்ளது. ஏற்கெனவே மருத்துவ பட்டமேற்படிப்புக்கான இடங்கள் விற்கப்பட்டு விட்டதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுள்ளன என மாணவர்கள், பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.