மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாகூர் மதிகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) நாவலர் (35). தனியார் மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய மணிகண்டன், அவரது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். வயது வித்தியாசம் காரணமாக மணிகண்டனுக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.
ஆனால், மணிகண்டன் மாணவியை பலமுறை அணுகி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தபோது, அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மணிகண்டன் தப்பிச் சென்ரார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மாணவியின் பெற்றோர் இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுத் தலைவர் வித்யா ராம்குமாரிடம் புகார் அளித்தனர்.
அவர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். பின்னர் மேல்நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர். மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.