புதுவையில் எலி மருந்து கலந்த மாவில் தோசை சுட்டு சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்.
புதுவை சண்முகாபுரம் அணைக்கரை வீதியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி இம்மானுவேல். இவரது மனைவி சாந்தா (52). இம்மானுவேல் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே எலியை கொல்வதற்காக எலிமருந்தை வைத்துள்ளனர்.
இந்த மருந்து எதிர்பாராவிதமாக தோசைக்கு அரைத்து வைத்திருந்த மாவில் விழுந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை இது தெரியாமல் சாந்தா தோசை சுட்டு சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்கிய அவரை குடும்பத்தினர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.