பயிற்சி நிறைவடைந்த காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தினார்.
புதுச்சேரி காவல் துறையில் 21-ம் பிரிவாக தேர்வு செய்யப்பட்ட 98 பெண் காவலர்கள் மற்றும் 32 ஆண் காவலர்கள் என மொத்தம் 130 காவலர்கள், இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு தேர்வு செய்யப்பட்ட 173 ஆண் காவலர்கள் என மொத்தம் 303 காவலர்களுக்கு கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான பயிற்சி நிறைவடைந்தது.
இதனை அடுத்து அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பணியிடங்களுக்கு செல்வதற்கு முன்பு அவர்களுடன் ஆளுநர் கிரண்பேடி கலந்துரையாட முடிவு செய்தார்.
அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கிரண் பேடி பங்கேற்று பயிற்சிக் காவலர்களால் தயார் செய்யப்பட்ட விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:
உங்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல நீங்களும் சிறப்பான முறையில் பயிற்சி பெற்றுள்ளீர்கள். பெற்ற பயிற்சியை மக்களுக்கு சேவையாற்ற பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். புதுச்சேரி காவல்துறைக்கு உள்ள பெயரை காப்பாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் டிஜிபி கவுதம், சீனியர் எஸ்.பிக்கள் கவாஸ், ராஜீவ் ரஞ்சன், சந்திரன், எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
இதன் ஏற்பாடுகளை காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வர ராவ் மற்றும் காவலர் பயற்சிப் பள்ளி அலுவலர்கள் செய்திருந்தனர்.