புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் 515 தினக்கூலி ஊழியர்களை பல்நோக்கு ஊழியர்களாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட பணி நிரந்தர ஆணையை நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டது.
பாப்ஸ்கோ மூலம் காய்கறிகள், வேளாண் இடுபொருள்கள், பட்டாசு, மதுபானம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்நிறுவனத்தைச் சேர்ந்த 515 தினக்கூலி ஊழியர்களை பல்நோக்கு ஊழியர்களாக நியமனம் செய்து பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது.
நிதி நிலைமை சரியாக இல்லாத நிலையில், அவர்களுக்கு கடந்த 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பல்நோக்கு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், நிலுவையில் உள்ள 13 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கஞ்சி காய்ச்சும் போராட்டம், கண்ணைக்கட்டி போராட்டம், உண்ணாவிரதம், சங்கு ஊதும் போராட்டம் எனப் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
பணிநிரந்தர ஆணை ரத்து: இந்த நிலையில், பாப்ஸ்கோ நிறுவனத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகக் காரணங்களால் 515 தினக்கூலி ஊழியர்களை பல்நோக்கு ஊழியர்களாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட பணி நிரந்தர ஆணை ரத்து செய்யப்படுகிறது என மேலாண்மை இயக்குநர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்தார். இதற்கான உத்தரவு நகல் அனைத்து பல்நோக்கு ஊழியர்களுக்கும், அரசுச் செயலாளர், தலைவர், இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.