புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தில் கேஸ் வெல்டிங் செய்யும் இடத்தில் இரும்பு எண்ணெய் பேரல் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் பழைய இரும்புக் கிடங்கு நடத்துபவர் சர்தார்பஷா.
இவர் பல்வேறு பகுதிகளில் இருந்து இரும்பு, தகடு சம்பந்தமான அனைத்துப் பொருள்களையும் வாங்கி கிடங்கில் வைத்து அதனை தகடுகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார்.
காமராஜர் நகர் சாரம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்ற வேலாயுதம் (43) வியாழக்கிழமை எண்ணெய் பேரல்களை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி தகடுகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு எண்ணெய் பேரல் திடீரென வெடித்து அவரது வயிற்றை கிழித்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டு, சம்பத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புப் பகுதியில் இரும்புக் கழிவுகளை கொண்டுவந்து, பாதுகாப்பற்ற வகையில் கேஸ் மூலம் பிரித்தெடுத்து விற்பனை செய்தவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.