பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலை ஊழியர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதேசி ஆலையில் 82, பாரதி பஞ்சாலையில் 290 தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதலில் ரூ.225-ம், தற்போது ரூ.300-ம் ஊதியமாக தரப்படுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களைக் காட்டிலும் தினக்கூலி ஊழியர்கள் அதிகம் பணிபுரிந்து வருகின்றனர்.
நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.650 ஊதியம் தரப்படுகிறது. அவர்களுக்கு ஈடாக பணியை செய்யும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.300 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது. மேலும் இஎஸ்ஐ, பிஎப் போன்ற பணம் எதையும் கட்டவில்லை. ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தபோதும், எந்தப் பதிலும் தரப்படவில்லை.
எனவே, பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், அடையாள அட்டை, சீருடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இரு ஆலைகளிலும் தினக்கூலி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் பஞ்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் உறுதி கூறப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.