புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டி, மணக்குள விநாயகர் கோயில் விநாயகருக்கு வியாழக்கிழமை 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி, தினம்தோறும் அனல் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தை தணிக்கவும், பூமி குளிரவும், பொதுமக்களை வெப்பத்திலிருந்து காக்கவும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் விநாயகருக்கு 1008 இளநீர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். மேலும், அபிஷேகம் செய்த இளநீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.