சுகாதாரத் துறை உத்தரவை அடுத்து மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவர்களிடம் கட்டண வரைவோலையை சென்டாக் நிர்வாகம் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டது.
மருத்துவ பட்டமேற்படிப்புக்கு கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அந்தக் கட்டணத்தைவிட அதிகம் கேட்பதால், இடம் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் சென்டாக் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரசு ஒதுக்கீடாக பெற்ற 162 இடங்களில் இதுவரை 76 இடங்கள் மட்டும் நிரம்பின.
சென்டாக் மூலம் தேர்வு பெற்ற மாணவர்கள் அந்தந்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கடைசி நாளாக 17-ம் தேதி புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.3 லட்சம் கல்விக் கட்டணமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் தொடர்புடைய கல்லூரிகளுக்கு சென்று அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தனியார் கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.
இதையடுத்து மாணவர், பெற்றோர் போராட்டத்தால் கட்டண வரைவோலைகளை சென்டாக் நிர்வாகமே வாங்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. பின்னர் வரைவோலைகளை கல்லூரி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை சென்டாக் மூலம் தேர்வான மாணவர்கள் 40 பேர் அளித்த கட்டண வரைவோலைகளை சென்டாக் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.