புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், வாராந்திரக் கலை விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 21) கடற்கரை காந்தி திடலில் நடக்கிறது.
இதுகுறித்து அந்தத் துறையின் இயக்குநர் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கலை, பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் ஒவ்வோர் வாரமும் வாராந்திரக் கலை விழாவை நடத்தி வருகிறது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ள வாராந்திரக் கலை விழாவில், ஸ்ரீ நந்தினி நாட்டியாலயா கலைக் குழுவினர் வழங்கும் பரதநாட்டியம் முதல் நிகழ்ச்சியாக நடைபெறும். பரதக் கலையின் வகைகளான புஷ்பாஞ்சலி, தில்லானா, மல்லாரி, சலங்கை, வர்ணம் போன்ற நடன வடிவங்கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி லக்ஷன் லயா கலை வளர்ச்சி மைய கலைக் குழுவினர் வழங்கும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடைபெறும்.