காவல் நிலையத்தில் கிரண் பேடி திடீர் ஆய்வு

புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாரம்தோறும் விடுமுறை நாள்களில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சனிக்கிழமை காலை முருகம்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை ஆய்வு செய்துவிட்டு வந்துகொண்டிருந்த அவர், முதலியார்பேட்டை-கடலூர் சாலையில் உள்ள காவல் நிலையத்திற்குள் திடீரென சென்றார். அப்போது, காவல் நிலையம் தூய்மை இல்லாமல் இருந்ததை அறிந்த அவர் காவல் ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர், உள்ளே சென்று அவர் தினம்தோறும் வரும் வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் எங்கே லாக்புக் (பதிவேடு) என்று கேட்டார். அது பராமரிக்கப் படவில்லை என்று தெரிந்துகொண்ட அவர் உடனடியாக அனைத்து குற்றவாளிகளின் கோப்புகளையும் கொண்டு வரும்படி கூறி அதனை பார்வையிட்டார்.
அவை சரியாக பதிவு செய்யப்படாமலும், முந்தைய மாதம் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் இருந்தது.
இதனால் கோபமடைந்த ஆளுநர் குற்றவாளிகளின் கோப்புகளையே சரிவர கவனிக்காத நீங்கள் எவ்வாறு பொதுமக்களை பாதுகாப்பீர்கள் என்று சாடினார்.
உடனடியாக அருகில் இருந்த காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹீமிடம் இதுகுறித்து உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி அனைவருக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க உத்தரவிட்டார்.
காவல் நிலையத்தில் துணைநிலை ஆளுநர் திடீர் ஆய்வு செய்ததால் அனைத்துக் காவலர்களும் பதற்றத்துடனே காணப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com