11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 31-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் கிருஷ்ணராஜூ தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-18-ஆம் கல்வி ஆண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 19.5.2017 முதல் அனைத்து அரசினர் மேல்நிலைப் பள்ளிகளிலும் விநியோகிக்கப்படுகின்றன.
11-ஆம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகள் எந்தெந்தப் பள்ளிகளில் சேர விரும்புகின்றனரோ அப்பள்ளிகளில் தனித்தனியே விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் இணையதள மதிப்பெண் நகலையும் (பிரின்ட் அவுட்), நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழையும் (பிக் பார்ம்), மாற்று சான்றிதழையும் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) இணைத்து அந்தந்த பள்ளிகளிலேயே 26.5.2017 அன்று மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு மாணவர் எத்தனை பள்ளிகளில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் பள்ளிகளில் பரிசீலனை செய்யப்பட்டு 31.5.2017 முதல் 11-ஆம் வகுப்புச் சேர்க்கை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். 5.6.2017 அன்று 11-ஆம் வகுப்பு தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.