அறிவித்த திட்டங்கள் எதையும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என, அதிமுக புகார் கூறியது.
இதுதொடர்பாக பேரவையில் நடைபெற்ற விவாதம்:
வையாபுரி மணிகண்டன் (அதிமுக): காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
முதல்வர் நாராயணசாமி: முந்தைய ஆட்சியில் முத்தியால்பேட்டையில் நிலவி வந்த மின் தட்டுப்பாடு முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளது.
வையாபுரி மணிகண்டன்: ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை ஏதோ பெரிய சாதனை செய்தது போல ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஸ்கர் (அதிமுக): அரசுத் தரப்பில் எழுதித் தந்ததை ஆளுநர் கிரண் பேடி வாசித்துள்ளார். தனது ஜனநாயக மரபைச் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். முதல்வரோ, ஆளுநரை விமர்சிக்காதீர்கள் என்கிறார். எம்.எல்.ஏ.க்கள், அரசு மற்றும் ஆளுநரை விமர்சிக்கலாம்.
மத்திய அரசிடமிருந்து கேட்ட நிதி தொடர்பாக எதுவும் பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக முறையான அறிவிப்புகள் இல்லை. பால் உற்பத்திக்கான திட்டம் எதுவும் இல்லை.
சர்க்கரை நோயாளிகள் அதிகமாகி வருகின்றனர். அவர்களுக்கு நியாய விலைக் கடைகளில் 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.