புதுச்சேரி மாநிலத்தில் பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியதும், மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் நாராயணசாமி பேரவை ஒப்புதலுக்கு முன் வைத்தார்.
தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது.
அன்பழகன் (அதிமுக): புதுவையில் பால் நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனம் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழகத்திலும் தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நாள்தோறும் 1.5 லட்சம் லிட்டர் பால் தேவை. பான்லே மூலம் 50 ஆயிரம் லிட்டர் பால்தான் உற்பத்தி ஆகிறது. மீதமுள்ள பால் தனியார்களிடம் இருந்தே பெறப்படுகிறது. பாலில் கலப்படம் தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
அமைச்சர் கந்தசாமி: பாலில் கலப்படம் தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யும் நிலை 6 மாதங்களில் மாறும். புதுவையிலேயே தேவையான அளவுக்குப் பால் உற்பத்தி செய்யப்படும்.
முதல்வர் நாராயணசாமி: பாலில் கலப்படம் தொடர்பாக தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி பான்லேவில் விற்கப்படும் பால் தரமாக உள்ளதா என பல்வேறு ஆய்வுகள் செய்த பிறகுதான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மாநிலத்தில் பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.