கடும் வெயில் காரணமாக, புதுச்சேரியில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, கல்வித் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தைப் போல, புதுச்சேரியிலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் மாதம் முதலே புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி கத்தரி வெயில் தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, நிகழாண்டு புதுச்சேரியில் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. ஒவ்வோர் நாளும் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை கடந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடும் வெயில் காரணமாக புதுச்சேரியில் வரும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.