தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் தரும் சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர்கள்- பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அதன் நிர்வாகிகள் மு.நாராயணசாமி, விசிசி. நாகராஜன் ஆகியோர் தலைமைச் செயலர் அஸ்வினிகுமாரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
புதிதாக பதவி ஏற்றுள்ள தலைமைச் செயலர் பணி சிறக்க எங்களது அமைப்பின் சார்பாக வாழ்த்துகிறோம். வருகின்ற 23-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவை கூட உள்ளதால், கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்ற ஆண்டு மருத்துவ மேல்நிலைப் படிப்புக்கு புதுவை மாநில மாணவர்களுக்கு தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்கள் கிடைத்தன.
ஆனால், வருகிற கல்வி ஆண்டு முதல் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களான 50 சதவீத இடங்கள் கிடைக்க முடியாமல் தடுக்கும் விதமாக, நிகர்நிலைப் பல்கலை. நிர்வாகங்கள் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியுள்ளன. இதற்கு புதுவை மாநில அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தும், புதுவை மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலிருந்து பெற சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல, மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை முறைபடுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளின் கல்விக் கட்டணம் ஒரு சில பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது. அதனை ரத்து செய்து, மீண்டும் புதிதாக கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணியை தவிர, வேறு பணிகளில் ஈடுபடக் கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்.