புதுச்சேரியில் சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (25). முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகர் திருநாவுக்கரசர் வீதியைச் சேர்ந்தவர் பாவாடை ராஜன் (24). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இருவரும் நண்பர்கள்.
நாகேந்திரன், பாவாடை ராஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஞாயிறறுக்கிழமை சென்றனர். நாகேந்திரன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். லாஸ்பேட்டை விமான நிலையச் சாலையில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாவாடை ராஜனை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நாகேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவை வடக்குப் பகுதி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.