புதுவையில் சைல்ட் லைன் அமைப்பு சார்பில், 22 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என பல்நோக்கு சமூக சேவை சங்க (பிஎம்எஸ்எஸ்எஸ்) நிர்வாக இயக்குநர் ஜோசப் அருமைச்செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவை சங்கம் மூலம் 2011-ஆம் ஆண்டு முதல் சைல்டு லைன்-1098 என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 18 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளிலிருந்து அவர்களை மீட்டு உதவி செய்கிறது. சைல்டு லைன் 1098 என்ற எண்ணுக்கு, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 2,502 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் குறுக்கீடு செய்யப்பட்ட வழக்குகள் விவரம்:
கொடுமையிலிருந்து பாதுகாத்தல் - 157, பெற்றோரிடம் ஒப்படைத்தல் - 12, உணர்ச்சிப்பூர்வ ஆதரவு (ஆலோசனை) - 92, அடைக்கலம் - 138, காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல் - 24, மற்றொரு சைல்டு லைன் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது - 8, மருத்துவ உதவி - 6, சட்டத்துக்கு முரணாக குழந்தை ஈடுபடுத்தப்பட்டது - 2, தேவையான உதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவை - 9, வகைப்படுத்தப்படாதவை 202 என மொத்தம் 677 வழக்குகள் குறுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 50 குழந்தை பாலியல் வழக்குகள் கையாளப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில் 22 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. கடந்தாண்டு சைல்டு லைன் மூலம் 12,712 பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களுக்கு குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, ஆண்டுதோறும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சைல்டு லைன் நண்பன் என்ற பிரசாரமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் ஆண்டுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (நவ.14) தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறும். சீனியர் எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன், எஸ்.பி. ரக்சனா ஆகியோர் தொடக்கிவைக்கின்றனர். மாலை 5.30 மணிக்கு எஸ்எஸ்பி அலுவலகத்தில் தோஸ்தி பேண்ட் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 20-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார் அருமைச்செல்வம்.
பேட்டியின் போது, குழந்தைகள் நலக் குழு தலைவி வித்யா ராம்குமார், சட்ட ஆலோசகர் ஜெகதீஷ், பிஎம்எஸ்எஸ்எஸ் நிர்வாக அலுவலர் பிஜித், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் ஆகியோர் உடனிருந்தனர்.